Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் உத்தரவாதம்: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

ஏப்ரல் 22, 2020 12:26

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளித்ததால், போராட்டத்தை  மருத்துவர்கள் கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், நேற்று மதியம் முதல் பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி டீனுக்கு மருத்துவர்கள் அனுப்பி இருந்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது:
கடந்த ஒரு மாதமாக நாங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். முதுமலை மருத்துவர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. மோசமான ஏற்பாடுகளால் எங்களுக்கு கொரோன தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த 16ம் தேதி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சில விதிமுறைகளுடன் ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால், அதன்படி இன்னும் எந்த வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதிலிருந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களின் நலனில் எந்தளவிற்கு அரசு அக்கறையின்றி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆதலால்,  மதியம் 3.30 மணியில் இருந்து அனைத்து வகையான கொரோனா பணிகளிலும் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்  காலை மருத்துவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசுகையில், “உங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். நிறைவேற்றப்படும்,” என்று அறிவித்தார். இதையடுத்து, மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

நேற்று பல்வேறு சிறப்பு சலுகைகளையும் மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ளார். போராட்டம் குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ''நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக டீன் உத்தரவாதம் அளித்ததால் பணிகள் துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்